வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், 2 நாட்களில் அந்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 23ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே 24ம் தேதி காலை கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வடமாவட்டங்களில் மற்றும் பிற கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.