காவலர் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் சார்பில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ம் ஆண்டு இந்தியா- சீனா எல்லை பகுதியில் நடந்த மோதலில் இந்திய காவலர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு மட்டும் 213 ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வீரமரணமடைந்துள்ளதாக கூறினார். மேலும், அவர்களது வீர மரணம் என்றும் வீண் போகாது எனவும் தெரிவித்தார்.
இதேபோல, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சேலத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவை போற்றும் விதமாக காவல்துறையினர் சார்பில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.