கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு காரில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் என்பவர் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். திட்டத்தை அரங்கேற்ற நிதி உதவி செய்த புகாரில் பவாஸ் ரஹ்மான், அபு ஹனிபா, சரண் மாரியப்பன் ஆகியோரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், அவர்களை சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள், மூன்று பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.