தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீரில், இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கின. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி 40-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டனர்.
இதேபோல் ஈரோடு, பவானி, அந்தியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், ஆர்.கே.வி. சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் கனமழையின் காரணமாக வண்டிபாளையத்தில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் பெய்து வரும் தொடர் மழையால் முட்டல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிள் அருவி பகுதிக்கு செல்ல 13-வது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.