தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், மு.க.அழகிரியை விட மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை உத்தங்குடியிலுள்ள தினகரன் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கியேதாடு, தீ வைத்தும் எரித்தனர். இந்த சம்பவத்தில் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில், அழகிரியின் ஆதரவாளரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமின்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய் பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், காட்டுவாசி முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
குற்றவாளிகள் அனைவரும் ஏழரை ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.