தமிழகத்தில் மொழியின் பெயரால் திமுகவினர் அரசியல் செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டி.டி தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை தவறுதலாக விடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என கூறியிருந்தார். உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், உதயநிதி ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயரா? என கேள்வி எழுப்பியதுடன், முதலில் அவர்கள் குடும்பத்தில் தமிழ் பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் யாரும் இந்தியை திணிக்கவில்லை எனவும், விருப்பமுள்ளவர்கள் இந்தியைப் படிப்பதை ஏன் திமுக ஆட்சேபிக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக என்றால் பாரபட்சம்தான் எனவும், அவர்கள் சமூக நீதியைப் பற்றிப் பேசுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், மொழியின் பெயரால் அரசியல் செய்யக்கூடாது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.