விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது வரும் விமர்சனங்களை போலவே அவரின் தலைமையில் நடைபெறும் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கும் தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக நிர்ணயித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்யின் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம் தான் இது.
பந்தல் கால் நடும் நிகழ்ச்சியே மாநாடு போல் நடைபெற்றதால் உண்மையான மாநாடு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது. கொடிக்கான விளக்கத்தையும், கொள்கை முழக்கத்தையும் தவெக தலைவர் விஜய் வெளியிட இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் மாநாட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
தங்களை வழிநடத்தும் தளபதி, தலைவரான பின்பு நடைபெறும் முதல் நிகழ்வு என்பதால் தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் மாநில மாநாட்டை திருவிழா போல கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் திரண்டு வந்திருக்கும் தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களின் இல்ல நிகழ்வை போல மாநாட்டுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புனித ஜார்ஜ் கோட்டையின் மதில்சுவர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் மாநாட்டின் நுழைவாயிலில் இரு யானைகள் பிளிரிக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு வருவோர் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட உள்ளது.
மாநாட்டுத் திடல் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அவசர மருத்துவ உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலை சுற்றிலுமே 700க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
முதல் மாநில மாநாடு என்பதால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் முன்னெடுக்காத வகையில் மாநாட்டிற்கு வருவோரை வழிநடத்திச் செல்ல சட்ட பாதுகாப்பு குழு, மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு, வாகனங்கள் வழிகாட்டும் குழு, தீர்மானக்குழு, மகளிருக்கென தனி பாதுகாப்பு வசதி என ஒவ்வொன்றையும் விஜய் உன்னிப்புடன் கண்காணித்து செயல்படுத்திவருகிறார்.
அதே நேரத்தில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கச் செய்திருக்கிறது.
விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது வரும் விமர்சனங்களை போலவே அவரின் தலைமையில் நடைபெறும் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. அதிலும் குறிப்பாக காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு நடுவில் விஜய் நிற்பது போன்ற 50 அடி உயர கட் அவுட் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஆரம்பம் முதலே திராவிட கட்சிகளின் சாயலை பின்பற்றுவதாக விஜய் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் பெரியாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய விஜய், தற்போது மீண்டும் அதனை உறுதிபடுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் இந்துக்களின் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லி அதனை ஈடுகட்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய பின்பு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்றாலும் பெரிய அளவில் அரசியல் பேசாத நிலையில், கொள்கை பிரகடன மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சியமைப்பதை குறிக்கோளாய் கொண்டு அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அதற்கு தகுதியானவராக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் இந்த மாநாடு அமைந்திருக்கிறது.