நீதி தேவதை சிலையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில், ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. பழைய சிலையுடன் ஒப்பிடும்போது புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பழைய நீதி தேவதையின் கண்கள் துணியால் கட்டப்பட்டிருந்த நிலையில், புதிய நீதி தேவதை சிலை கண்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது.
அதேபோல், பழைய சிலை கையில் வாளுடன் இருந்த நிலையில், புதிய சிலை கையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி தேவதை சிலையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கபில் சிபல் மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இந்த மாற்றங்கள் தங்களது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.