தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
செஞ்சியில் உள்ள வார ஆட்டு சந்தையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கம். ஆடுகளை வாங்குவதற்காக ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆட்டுச்சந்தையில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டன. அதில் வெள்ளாடுகள் ஜோடி 35 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளதாகவும், 4 மணி நேரத்தில் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.