உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபாலே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியதும் பாரத மாதா திருவுருவ சிலைக்கு அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே. நட்வர் சிங், சுஷில்குமார் மோடி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் உயர்நிலை அமைப்பான பிரதிநிதி சபாவை மறுசீரமைப்பது மற்றும் அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.