குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி ஒருவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது பல தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படையில் இளம் பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாகக் கூறி, அண்மையில் வெளியான பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். அந்த பெண் அதிகாரிதான் CRPF உதவி கமான்டண்டான பூனம் குப்தா. ஆனால், அவர் பிரதமரின் பாதுகாப்பு படையில் இல்லை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான பூனம் குப்தா, கணிதத்தில் இளங்கலை பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகத்தில் இருந்து B.Ed பட்டமும் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டு UPSC-யின் CAPF தேர்வு எழுதிய பூனம் குப்தா தேசிய அளவில் 81-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். பின்னர் CRPF உதவி கமான்டண்டாக பொறுப்பேற்ற அவருக்கு, முதல் போஸ்டிங்கே நக்சல் தாக்கம் அதிகமுள்ள பீகார் பகுதியில்தான்.
அங்கு பூனம் குப்தா அர்பணிப்புடன் ஆற்றிய பணி அவரின் புகழை குடியரசு தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றது. அதன் பலனாகவே குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின், தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார் பூனம் குப்தா. இந்நிலையில், இவருக்கும், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் மற்றொரு CRPF உதவி கமான்டண்டான அவ்னேஷ் குமாருக்கும் வரும் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
பூனம் குப்தாவின் சிறப்பான பணி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மனதை வெகுவாக கவர, அவரது திருமணம் பற்றி கேள்விப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில், திருமண வைபத்தை நடத்த பூனம் குப்தாவுக்கு அறிவுறுத்தி அதற்குரிய அனுமதியையும் வழங்கியிருக்கிறார்.
இதன் மூலம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பூனம் குப்தா – அவ்னேஷ் குமார் திருமணம் குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. உரிய பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் திருமண நிகழ்வில் பங்கேற்க குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் மிக ACTIVE ஆக இருந்து வரும் பூனம் குப்தா, தனது பணி மற்றும் வாழ்க்கை குறித்த UPDATES-கள், WOMEN EMPOWERMENT மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
ஒரு ராஜ வம்சத்து பெண்ணுக்கே கிடைக்காத இத்தகைய வாய்ப்பு, குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள இளம் பெண் அதிகாரிக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதைக்கேட்டு அனைவரும் வாய்பிளப்பதில் ஆச்சரியம் இல்லைதானே.