தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல் என்றும், ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று விமர்சித்துள்ள அவர், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.