மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமைப்பின் நிறுவன தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாக்பூர் சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, ஆா்எஸ்எஸ்ஸின் நிறுவனத் தலைவர்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வால்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும், தலைவர்களின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர், பௌத்த மதத்திற்கு மாறிய தீக்ஷாபூமிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, புத்த பிட்சுகள் வரவேற்றனர். பின்னர், அங்குள்ள புத்தர் பீடத்தில், மலர் தூவி பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.