சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், நவீன அறுவை சிகிச்சை மையங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பகவத், சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி , மனப்பூர்வமாக செயல்பட வேண்டுமென்றும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் புகழை மேலும் அதிகரிக்கும் செயல்களில் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து ஈடுபடும் என்றும், ஆர்எஸ்எஸ்-ன் சீரிய பங்களிப்பிற்கு அதன் தொண்டர்களும், நிர்வாகிகளுமே காரணம் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நீண்ட பயணத்தின் மூலம், சமூகம் சங்கத்தின் தன்னார்வலர்களை சோதித்து, ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் விளைவாக, ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னார்வலர்கள் முன்னேறி வருவதாகவும் பகவத் கூறினார்.
நான் உங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நிற்க மாட்டேன் என்றும், ஏனென்றால் இன்று நான் அவரது பேச்சைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றும் மோகன் பகவத் கூறினார்.