தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, தில்லை நகர் A1 குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், திருச்சி, வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அமைச்சர் நேருவின் மகள் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குத் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யுமான அருணுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. மசக்காளிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் 3 கார்களில் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.