கருணாநிதி நினைவிடத்தைக் கோயில் கோபுரம் போன்று அலங்கரித்த அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல அலங்கரித்து அமைச்சர் சேகர்பாபு வழிபட்டார். அந்த அலங்காரத்தில் கோயிலின் வரைபடம், தமிழக அரசின் சின்னம், இந்து சமய அறநிலையத்துறை என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்தது. அமைச்சரின் இந்த செயல் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக
அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
“பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியவர், அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த பிரச்சனைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.