அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சை திரையிட செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சராக உள்ளவர்கள் பொறுப்புடன் பேச வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை எனவும், பொன்முடி கூறிய இதே கருத்தை வேறு யாரேனும் கூறியிருந்தால் இந்நேரம் குறைந்தது 50 வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி கூறினார்.
பொன்முடி மீது இதுவரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், வீடியோ ஆதாரம் இருக்கும்போது புகார் இல்லாமலே வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி,
இவ்விவகாரத்தில் வரும் 23ம் தேதிக்குள் FIR பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் பொன்முடி மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து டிஜிபி பதிலளிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்தார்.