வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்ட திருத்தத்தின் சில சரத்துகளை பார்த்து மட்டும் உத்தர்வுகளை பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது எனவும், ஏற்கனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், புதிய சட்டப்படி எந்த வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து புதிய சட்டப்படி நிலங்களை வகைப்படுத்த மாட்டோம் எனவும், வக்ஃபு உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என தெரிவித்த தலைமை நீதிபதி,முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் 5 அல்லது 6 மனுக்களை விரிவாக விசாரித்து உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் வக்ஃபு வாரியம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.