சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை நோக்கி டேங்கர் லாரி ஒன்றும் அதைத்தொடர்ந்து கேஸ் டேங்கர் லாரி ஒன்றும் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி எதிரே வந்த அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதைத்தொடர்ந்து கேஸ் டேங்கர் லாரியும், டேங்கர் லாரி மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த தொடர் விபத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.