தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
சுற்றுலாவிற்காக காஷ்மீர் சென்ற நம் மக்கள் மீது நடைபெற்ற கோழைத்தனமான, கொடூர தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழுந்து தங்களது கண்டனங்களையும், வேதனைகளையும் பதிவு செய்து வருகிறது. உலக நாட்டு மக்களும், தலைவர்களும் நமக்கு ஆறுதல் சொல்லி நமது நடவடிக்கைகளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு அரியணை ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை, உள்நாட்டு தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்திற்கும் எதிரான தன் கடுமையான யுத்தத்தை முன் வைத்துள்ளார். தன் உறுதியான நடவடிக்கைகளின் மூலம், தாய்நாட்டைப் பாதுகாத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியானது தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க அஞ்சியதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம். ஆம், இந்த நாட்டைத் துண்டாடத் துடித்தவர்களின் கரங்களைத் தங்களின் வாக்கரசியல் மூலம் பலப்படுத்தியது காங்கிரஸ். ஆனால் தேசத்தின் வலிமையை, ஒற்றுமையை, சம உரிமையை நம்பும் பாஜக-வின் ஆட்சியில் காஷ்மீர் மீட்டெடுக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைச்செருகலாக வந்தது தான் 370 வது சட்டப்பிரிவு. சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தன் எதிர்ப்பைத் தெரிவித்தும், அப்போதைய ஆட்சியாளர்களால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்த 370 வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் ஆன்மாவிற்கு சவால் விடுவதாக அமைந்திருந்த இந்த சட்டத்தை மாற்றி அமைத்து தேசப் பிரிவினைவாதிகளின் நோக்கங்களை முறியடித்தது, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சியில்தான்.
ஆனால், 370 வது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது என காங்கிரஸ் – திமுக கூட்டணியோடு சேர்ந்து திருமாவளவன் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார். காஷ்மீர் பிரிவினைவாத போராட்டத்தைப் “புரட்சி” என்று வர்ணிப்பவர்களை எல்லாம் விசிக-வில் வைத்துக் கொண்டு, திருமாவளவன் அவர்களும் அதே தொனியில் பேசி வந்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட, இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, திருமாவளவன் அவர்களின் கருத்தில் பாஜக அரசு 370 வது சட்டப்பிரிவை நீக்கியதைக் குறை சொல்வதுதான் இப்போது விஞ்சி நிற்கிறது. இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுதான்.
திருமாவளவன் அவர்களின் இண்டி கூட்டணிக்கு, காஷ்மீர் பழையபடி நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான பிரிவினைவாதம் பேசும் பகுதியாகவே இருக்க வேண்டும். லால் சவுக்கில் இந்தியக் கொடி பறக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும் போது, இண்டி கூட்டணியும் அதன் பங்காளியான திருமாவளவன் அவர்களும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில் மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் பதவி விலகச் சொல்கிறார் திருமாவளவன் அவர்கள்.
அதே போன்று தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய சாவுகள் (கள்ளக்குறிச்சியில் மட்டும் 68 பேர் இறந்தனர்), லாக்-அப் மரணங்கள், சாதிய படுகொலைகள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று, காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள, சட்டமொழுங்கு சீர்கேட்டில் No. 1 முதல்வரான திரு. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலகச்சொல்வாரா திருமாவளவன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கோவை கார் குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு எனப் பூசி மெழுகப் பார்த்து இன்று வரை வழக்கின் ஆழம் தீவிரவாத செயலாகவே நீண்டு செல்கிறதே அதற்காக ஏன் தமிழக முதல்வரைப் பதவி விலகச் சொல்லவில்லை? கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தது திமுக அரசு, விசிக கட்சியோ அவருக்கு மரியாதை செலுத்தியது. இதற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டிய திரு. திருமாவளவன் அவர்கள், இந்த தேசத்தின் நவீன இரும்பு மனிதராக வாழும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைப் பதவி விலகச் சொல்வது நியாயமா?
தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட முடியும் என்று மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் நடவடிக்கை, நம் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் தேசத்தின் ஒற்றுமைக்காக உரத்த குரல் கொடுக்காமல் இந்த நேரத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் திரு. திருமாவளவன் அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.
நம் உறவுகளை எல்லாம் உயிரற்ற சடலங்களாக்கி, மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக எந்த உச்சபட்ச நிலைக்கும் செல்லும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களே நிறைய உள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.
ஆனால், அதற்குத் துணை நிற்காமல், தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டுமென நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.