குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெறும் 3 ஆயிரத்து 935 பணியிடங்களுக்கான குரூப்-4 அறிவிப்பை ஸ்டாலின் மாடல் அரசு வெளியிட்டுள்ளதாகவும், இது தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
காலியாக உள்ள பணியிடங்களில் மூன்றரை லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் கூறியது நினைவிருக்கிறதா? எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல் எனவும். மாணவர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்காமல் “அரசு” என்பதன் இலக்கணத்தையே மறந்து கார்ப்பரேட் கம்பெனி போல் ஸ்டாலின் மாடல் அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
உடனடியாக குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.