26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கரே தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தானுடனான நட்புறவை முறித்துக் கொள்ளும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, தீவிரவாத குற்றங்களை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்திய நாட்டிற்குள் பல்வேறு காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற இன்று வரையும், மருத்துவ தேவைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29-ம் தேதி வரையும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வாகா எல்லையில் ஏராளமான பாகிஸ்தானியர்கள், வாகனங்களில் அணிவகுத்து நின்றனர். வாகா – அட்டாரி எல்லை வழியாக அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.