அரசு உத்தரவையும் மீறி தமிழகத்தில் மாணவர்களிடம் அதிக கட்டணத்தைக் கல்வி நிறுவனங்கள் வசூலித்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் அரசின் வழிகாட்டுதல்களின்படி இளநிலை படிப்புகளுக்கு 48 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 58 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்ற விதிகளைத் தமிழக அரசு ஏற்கனவே விதித்துள்ளது.
இந்நிலையில் சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021-24ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் 72 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.
இதில் ஒட்டுமொத்தமாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக 3 கோடியே 14 லட்சம் ரூபாய் மாணவர்களிடம் கட்டண வசூல் நடைபெற்றுள்ளதும் சிஏஜி அறிக்கையில் வெளிவந்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கட்டண வசூல் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.