துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய தரை கையாளும் செலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை இந்தியா உடனடியாக ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானுக்குத் துருக்கி காட்டிய வெளிப்படையான ஆதரவின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில்,பாகிஸ்தான் விமானப்படை இரண்டு நாட்களில் முக்கிய இந்திய விமான தளங்களைக் குறிவைத்து 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இந்திய பாதுகாப்புப் படைகள் அவை அனைத்தையும் நடுவானிலேயே இந்தியா இடைமறித்துச் சுட்டு வீழ்த்தின.
பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் எல்லாம் துருக்கியின் தயாரிப்புகள் என்று தெரியவந்தது. இதனால் சன்னி இஸ்லாமிய நாடுகளான துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆழமான ராணுவ ஒத்துழைப்பு வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய துருக்கியை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர். BOYCOTT TURKEY ஹேஷ் டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது. இந்தியச் சுற்றுலாப் பயணிகள் துருக்கியைத் துரோக நாடு என்று கைகழுவியுள்ளனர். துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதியை நிறுத்துவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். திரைப்படத் துறையினரும் துருக்கியைப் புறக்கணித்துள்ளனர். துருக்கியுடனான வர்த்தகத்தை இந்திய வியாபாரிகள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களையும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ரத்து செய்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், கண்ணூர், கோவா கான்பூர், அகமதாபாத் ஆகிய ஒன்பது இந்திய விமான நிலையங்களில் தரைவழி கையாளும் சேவைகளை இந்நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கி வந்தது.
இந்த விமான நிலையங்களில் பயணிகளை நிர்வகித்தல், விமானச் செயல்பாடுகள், சரக்குகளை ஏற்றுதல்,இறக்குதல் மற்றும் பொது விமானப் போக்குவரத்துக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் செலேபி நிறுவனப் பொறுப்பில் இருந்தது.
இந்த சிலிபி நிறுவனம், துருக்கி அதிபர் எர்டோகனின் இளைய மகளான சுமேயே பைரக்தருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை, செலிபி இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. 39 வயதான Sumeyye சுமேயேவின் கணவரான Selcuk Bayraktar செல்சுக் பைரக்தார், ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட ஆளில்லா ட்ரோன்களைத் தயாரிக்கும் (baykar defense) பைகர் டிஃபென்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த பைகர் டிஃபென்ஸ் தயாரித்த ட்ரோன்களையே இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் சிலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு செய்துள்ளது. இந்த நடவடிக்கை,சிபிலியின் பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நாட்டின் மக்களின் பாதுகாப்பை விட எதுவும் உயர்ந்ததல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, தேசிய நலனும் பொதுப் பாதுகாப்பும் மிக முக்கியமானவை என்று கூறியுள்ளார். மேலும், பயணிகளின் வசதி, சரக்கு செயல்பாடுகள் மற்றும் சேவை தொடர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் மற்றும் சரக்குகளைத் தடையின்றி கையாளுவதை உறுதி செய்யும் வகையில், செலேபியில் பணிபுரியும் ஊழியர்களைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.