வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் மூலமாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வா்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நவா ஷேவா மற்றும் கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக இறக்குமதி அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பழம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் உள்ளிட்டவை எந்தவொரு நில சுங்க நிலையங்கள் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நில சுங்கச்சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் பருத்தி நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு தடை விதித்து, கடல் துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்த நிலையில், இதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.