நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதனுக்குச் சொந்தமான நிலத்தைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983-ல் கையகப்படுத்தியது.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படாததால் பயன்படுத்தாமல் இருந்த நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என லலிதாம்பாள், விஸ்வநாதன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023-ல் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி, குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால் தண்டனையை அனுபவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு ஆணையிட்டார்.