பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 230 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. நிதி பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பாலத்தின் பணிகள் 2024ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் முடிவடைந்தது.
கடந்த ஐந்து மாதங்களாக பாலம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்நிலையில், பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், ஆங்காங்கே சிறு சிறு வேலைகள் செய்யப்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவசர கதியில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அலட்சியமாக செயல்பட்டது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.