கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை இந்த செய்தித் தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் தொடங்கியவுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனது பங்கிற்கு நீர், மோர் பந்தல்களைத் திறப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்கள் அடுத்தடுத்த நாட்களில் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கின்றன.
சென்னையின் பிரதான இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதாக கூறி திமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் அக்கட்சியின் விளம்பர பேனர்களாக மட்டுமே இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் தேடி அலையும், பறவைகளைப் போலச் சுற்றித்திரியும் பொதுமக்கள், தண்ணீர் பந்தல் எனும் பலகைகளை நாடிச் சென்று பார்க்கும் போது அங்குப் பாசிகள் நிறைந்த காலிக் குடங்கள் மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
வாழைப்பழத்தில் தொடங்கி ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி என அனைத்து வித பழங்களுடன் ஆடம்பரத்துடன் அரசியல் கட்சியினரால் தொடங்கி வைக்கப்படும் தண்ணீர் பந்தல்கள் காலப்போக்கில் குடிக்கக் குடிநீர் கூட இல்லாமல் காட்சியளிப்பதன் மூலம் அந்த நீர் மோர் பந்தல்கள் திறக்கப்படுவது விளம்பரத்திற்காக மட்டும் தானோ என எண்ணத் தோன்றுகிறது.