கேரளாவில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த 24-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாகக் கனமழை நீடித்து வருகிறது.
பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த மழை காரணமாக, இடுக்கி, கொல்லம் மற்றும் கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.