மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் தமிழக எம்.பி.க்கள் எம்.சண்முகம், வைகோ உள்ளிட்ட 6 பேரின் பதவிகாலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த பதவிகளுக்கான தேர்தல் ஜுன் 19ம் தேதியன்று நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே அதிமுகவின் 2 இடங்களில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்குமாறு தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படும் நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சீட்டை பெறப் போட்டிப் போடுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.