பாகிஸ்தானின் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள இந்தியா, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் அவற்றைச் சமர்ப்பித்து மீண்டும் பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச நிதி ஆணையத்திடமிருந்து, நிதி உதவி பெற்ற ஆண்டுகளில், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதியை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மார் 18 சதவீதத்தைச் செலவழித்து வருகிறது. இதுவே பாகிஸ்தான், IMF நிதி உதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான சான்றுகள் ஆகும்.
பாகிஸ்தான் அரசுக்கான வருமானம் வரியிலிருந்து வரவில்லை- அந்நிய கடன்களிலிருந்து வருகிறது எனத் தரவுகள் காட்டுகின்றன. 2018ம் ஆண்டில் பாகிஸ்தான் FATF சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கும் நிதி மோசடிக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் முறையிட்டது. இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இறுதிக்குள் 34 அம்ச செயல்திட்டத்தைச் செயல்படுத்துமாறு FATF பாகிஸ்தானை வலியுறுத்தியது.
தொடர்ந்து கோவிட் காரணமாக இந்தக் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டது. 2020 முதல் 2022 வரை, நிதி மோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மேற்கொண்டது. செயல் திட்டத்தின் நிறைவை உறுதிப்படுத்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் நேரடியாகப் பாகிஸ்தானுக்குச் சென்று, FATF குழு விசாரணை செய்தது. தொடர்ந்து 2022ம் ஆண்டு அக்டோபரில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.
அப்போதே, இந்தியா, பயங்கரவாதத்துக்குத் துணை போகும் பாகிஸ்தானை நீக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியமான ராணுவத் தாக்குதலை நடத்தியது.
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடார், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை இந்தியா தாக்கி அழித்தது.
பாகிஸ்தான் அரசு கெஞ்சிக் கேட்டதற்குப் பின், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக ZERO TOLERANCE என்ற இந்தியாவின் கொள்கைக்குச் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டவும், ஆப்ரேஷன் சிந்தூர பற்றியும், பயங்கரவாத பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தவும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை 32 நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
பாகிஸ்தானுக்கும் பயங்கர வாதத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய தெளிவான ஆதாரங்களை எடுத்துரைத்த AIMIM கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி, பாகிஸ்தானில் ஃபீல்ட் மார்ஷலாக ஆக அசிம் முனீர் நியமிக்கப்பட்டபோது, அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி முகமது எஹ்சான் ஃபீல்ட் மார்ஷலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப் படத்தையும் எடுத்துக் காட்டினார்.
பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுகிறது, மேலும் இந்தியாவில் இந்து முஸ்லிம் கலவரங்களை உருவாக்கி இந்தியாவைச் சீர்குலைப்பதே பாகிஸ்தானின் முழு நேர பணியாகும். அதற்காகவே பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உதவி வருகிறது
எனவே,பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ஓவைசி, சவூதி அரேபியாவிலிருந்து கணிசமான நிதி உதவியைப் பாகிஸ்தான் பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர் நிதியுதவியும், சுமார் 3 பில்லியன் டாலர் கடனும் சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இருந்த போதிலும், பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலையாக இல்லை. அந்த நிதி ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர் பாகிஸ்தானுக்கு 8,000 கோடி ரூபாய்க்கு மேல் தவணை நிதியை IMF விடுவித்துள்ளது. இந்திய மக்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தப் பயங்கரவாதிகளுக்குத் தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதிப்பதால், பாகிஸ்தானுக்குக் கொடுத்த தவணை நிதியை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா IMF கேட்டுக் கொண்டது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவி “பயங்கரவாதத்துக்கு மறைமுக நிதியளிப்பு” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். பயங்கர வாத பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க அனைத்து வகையிலும் இந்தியா முயற்சி செய்து வருகிறது.அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.