மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக தடபுடலாக 24 வகையான அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் உணவு அருந்துவதற்காக பந்தியில் அமர்ந்தனர். அப்போது முதலமைச்சர் சாப்பிட்ட பின் தான் தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பந்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அசைவ உணவுக்காக வைக்கப்பட்ட இலையிலேயே சிலர் தலை வைத்து படுத்து உறங்கினர்.
மேலும் சிலரோ ஏன் தான் வந்தோம் என நினைத்து தலையில் கை வைத்தும், சக தொண்டர்களுடன் புலம்பியபடியும் அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட வந்த இடத்தில் நாளிதழை படித்து கொண்டிருந்தனர்.
பின்னர் ஒரு வழியாக முதலமைச்சர் சாப்பிட்ட பின் உணவு பறிமாறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்கள் அசைவ விருந்தை ருசித்து சென்றனர்.
இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் உணவு பரிமாற கேரளாவில் இருந்து பணியாட்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், திமுக தொண்டர்கள் கேட்ட உணவுப் பொருட்களின் பெயர் தெரியாததால் அவர்கள் பரிமாற முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.
கேரளாவில் இருந்து உணவு பரிமாற வந்த 600-க்கும் மேற்பட்டோர் மலையாள மொழியில் பேசியதால் அவர்களிடம் விரும்பிய உணவு களை கேட்க முடியாமல் திமுக தொண்டர்கள் தவித்தனர். இதனால் கேட்ட உணவு கிடைக்காமல் கிடைத்த உணவை உண்டுவிட்டு திமுக தொண்டர்கள் விரக்தியில் புறப்பட்டு சென்றனர்.