ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளன. பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை உக்ரைன் துல்லியமாக தாக்கி அழித்திருப்பது ரஷ்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள விமானப்படை தளம் மீது உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ்-லிருந்து சுமார் 6,000 கி.மீ தொலைவில் இந்த விமானப்படை தளம் அமைந்துள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் துல்லியமாக தாக்கியிருப்பது ரஷ்ய ராணுவத்திற்கு பீதியை கிளப்பியுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 40 விமானங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், இர்குட்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் இந்த தாக்குதல் நடந்தது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார். கிழக்கு சைபீரிய நகரமான பெலாயா, பின்லாந்து நாட்டின் அருகே உள்ள ஒலென்யா, மாஸ்கோவின் கிழக்கே உள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவோவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ரஷ்யாவின் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 ரக விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் எதிரி நாட்டின் மீது குண்டுகள் வீச பயன்படுத்தப்படும் விமானங்கள் என கூறப்படுகிறது
தற்போது தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த போரில் உக்ரைன் இந்த அளவுக்கு ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் நீண்ட தூர தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானங்களை அழிப்பதற்கு உக்ரைன் தனி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. ‘ஸ்பைடர் வலை’ என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஏறத்தாழ ஓராண்டு காலம் உக்ரைன் ராணுவம் திட்டம் தீட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த ஒரு ட்ரோனும் தொடர்ந்து 6,000 தொலைவுக்கு அப்பால் பறக்காது. எனவே மரக்கட்டைகளை ஏற்றி செல்லும் லாரியில் இந்த ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகள் விமானப்படை தளத்தை நெருக்கியபோது, உக்ரைனிலிருந்து ஆப்ரேட் செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடி எல்லாமும் சரியாக நடந்ததால், ரஷ்யாவின் விமானப்படைத்தளம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் ரஷ்யாவை கடுமையாக சீண்டும். உக்ரைனுக்கு பதிலடி வழங்கும் வகையில் ரஷ்யா நடத்தும் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.