புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டி கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு தேவாலய பங்குத் தந்தைக்குச் சொந்தமான இடத்தில் கிராம மக்களால் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வந்த நிலையில், பள்ளியை நிர்வகிக்க யாரும் இல்லாததால், கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டுத் தீர்வு காணும் வரை மாணவர்களை வகுப்புக்கு அனுப்பமாட்டோம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.