அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை தொடர்ந்து தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறோம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
திமுக அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, “சார்” பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது.
எங்கள் சந்தேகமானது, மரியாதைக்குரிய நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான்! இன்று எங்கள் தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன் – யார் அந்த சார்?
1. டிசம்பர் 24-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகர் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்?
2. டிசம்பர் 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகர் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்?
3. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், திமுக வட்ட செயலாளர் திரு. கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை. ஊழியர் திரு. நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?
4. அதன் அடிப்படையில், ஆதாரத்தை அழித்தல், குற்றவாளியை பாதுகாத்தல் உட்பட பல பிரிவுகளில் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை?
5. குற்றவாளி ஞானசேகருக்கும் இவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களும், மற்ற தொடர்புகளும் நீதிமன்றத்திலாவது சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா?
6. பாதிக்கப்பட்ட பெண்ணை FIR கொடுக்க வேண்டாமென காவல்துறையினரே தடுத்தது ஏன்?
7. அதையும் மீறி துணிச்சலாக புகாரளித்த அந்தப் பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?
8. மே மாதம் 16-ம் தேதி போடப்பட்ட FIR-ன் விவரங்கள் என்ன?
இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் பதிலுக்காக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.