தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி முருகர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அது குறித்த ஆலோசனை கூட்டம் மேலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மொழியை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மத்திய அரசோடு இணைந்து பேசி மத்திய அரசு திட்டங்களை, உதவிகளை பெறுவதற்கு திமுக தயாராக இல்லை என தெரிவித்தார்.
தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல், எந்த ஷா வந்தாலும் ஆள முடியாது என்று முதல்வர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு.. “தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருக்கிறது, தமிழ்நாடு காவல்துறை முதலமைச்சரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக ஆட்சி மலருவதற்கு “ஷா” நிச்சயமாக வருவார் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.