லைகா நிறுவனத்துக்குத் தர வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. மேலும், கடன் தொகையைத் திருப்பச் செலுத்தும் வரை விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் படங்களை வெளியிட்டதாகக் கூறி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பு வழங்கினார்.
அதில், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும், வழக்குச் செலவுத் தொகையையும் விஷால் தரப்பு வழங்க வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா ஆணையிட்டார்.