சென்னை அடுத்த ஆவடியில் எஸ்.பி.ஐ. வங்கி இரவு முழுவதும் திறந்து கிடந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கையால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே இயங்கி வரும் எஸ்.பி.ஐ., அரசு வங்கியின் மரக்கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் பூபாலனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் மற்றும் கடைநிலை ஊழியர் ஆகியோர் வங்கியில் ஆய்வு செய்தபோது, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
விசாரணையில், இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாகப் பூட்டாமல் சென்றது தெரியவந்தது.
உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய எஸ்.ஐ., சிவக்குமாரை, காவல் ஆணையர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.