கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், புரவிபாளையத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்கள், கிராவல் மண் உள்ளிட்டவைகளை எடுக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் செந்தாமரைக்கு எதிராகப் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமவளங்களுக்கு இணையான அபராதத் தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கோவை உதவி ஆட்சியரின் விதித்த அபராத தொகையை உறுதி செய்து மொத்த தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.