புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாகப் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் 4 நாட்களுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையைச் சரிபார்க்க ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திரையரங்குகள் அதிக கட்டணத்தை வசூலிப்பது பார்வையாளர்களை ஏமாற்றும் செயல் என்றும், இது தொடர்பான புகார்கள் அளிக்கப்படும்போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.