செய்யாறில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்த நிலையில், புளிரம்பாக்கம், பெருங்களத்தூர், அனக்காவூர், தும்பை, வன்னியன் தாங்கள், பாப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், மழையின்போது காற்று பலமாக வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்திலும், செய்யாறு – காஞ்சிபுரம் சாலையிலுள்ள விநாயகர் கோயில் மீதும் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அதேபோல, செய்யாறு சந்தை அருகே வாகன நிறுத்துமிடத்தில் சாய்ந்து விழுந்த ராட்சத மரத்தால், 3 டூரிஸ்டு வேன்கள் சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாகப் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில், திடீரென மழை பெய்தது.
போளூர், அத்திமூர், ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.