அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
குடிபெயர்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறும் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய காவல்படையினுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ட்ரம்ப்பின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் புலப்பெயர்ந்தோர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளை உபயோகித்தும் காவல்துறையினர் கலைத்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
தேசிய காவல்படையினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண், வாய்ப்புகள் தேடி அமெரிக்காவிற்கு வாருங்கள் என அழைத்துவிட்டு, தற்போது அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதாக முழக்கம் எழுப்பினார். மேலும், 200க்கும் மேற்பட்டோர் இணைந்து ட்ரம்பின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். அப்போது தங்களை வெளியேற்றுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரை வேண்டுமென்றே அமெரிக்க போலீசார் ரப்பர் துப்பாக்கியால் சுடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.