ஆப்ரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் அல்லாத நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பின், செனாப் உள்ளிட்ட நதிகளில் அணைகள் கட்டும் பணி வேகமடைந்துள்ளது. அதனால், பாகிஸ்தான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் நடவடிக்கையாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார்,சலால் ஆகிய இரு அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, ஜீலம் நதியில் கட்டப்பட்டுள்ள கிஷன்கங்கா அணையில் இருந்தும் பாகிஸ்தானுக்குத் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் போரை நிறுத்துமாறு இந்தியாவுடன் கெஞ்சிய நிலையில்,ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று இந்தியா உறுதியாக தெரிவித்துவிட்டது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றபின், சிந்து நதி நீர் தொடர்பான பிரச்சனையைப் பாகிஸ்தான் எழுப்பியது. உலக வங்கி முன்னிலையில் 1960ம் ஆண்டு சிந்துநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போதிலிருந்து, மேற்கில் இருக்கும் மூன்று நதிகளில் நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான இந்தியாவின் திட்டங்களைப் பாகிஸ்தான் பல்வேறு பொய் காரணங்களைச் சொல்லி இன்றுவரை தடுத்து வருகிறது. ஏற்கெனவே, 2017ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் எட்டு நீர்மின் திட்டங்களை விரைவாகக் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டது. மொத்தம் சுமார் 567 கோடி ரூபாய் செலவில் 6,352 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயல் திட்டமாகும்.
சாவல்கோட்டில் 1,856 மெகாவாட், கீர்த்தாய் ஒன்றில் 390 மெகாவாட், கீர்த்தாய் இரண்டில் 930 மெகாவாட் , பகால் துல்லில் 1,000 மெகாவாட், குவாரில் 540 மெகாவாட், கிருவில் 624 மெகாவாட், பர்சாரில் 800 மெகாவாட் மற்றும் 212 மெகாவாட் பல்நோக்கு உஜ் திட்டம் ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
செனாப் நதியின் மீது 1,856 மெகாவாட் சவால்கோட் நீர்மின் திட்டம் 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின் 2021ம் ஆண்டு, சவால்கோட் நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில அரசுடன் தேசிய நீர்மின்சாரக் கழகம்( NHPC ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2025ம் ஆண்டுக்குள் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படும் இலக்குடன் இதன் கட்டுமானம் 2023ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மற்றும் உதம்பூர் மாவட்டங்களின் விவசாய வளர்ச்சிக்கான இந்த திட்டம், பெரிய அளவிலான தண்ணீரைச் சேமிக்காமல், நிலையான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
சாவல்கோட் நீர்மின் நிலையம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் என்றும், கூடுதலாக ஜம்மு-காஷ்மீரை மின்சாரப் பற்றாக்குறையிலிருந்து உபரி மின்சாரத்தை உருவாக்கும் மாநிலமாக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்குள் நேரடியாகப் பாயும் செனாப் நதி, அந்நாட்டின் விவசாய உற்பத்திக்கு உயிர்நாடியாக உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், இந்தியா மின்சார உற்பத்தியைப் பெருக்குகிறது.. கூடவே, பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்துகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இந்தியா ஒரு துப்பாக்கி தோட்டாவைக் கூட இந்தியா பயன்படுத்தவில்லை. மாறாக, அதிரடி தண்ணீர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதை முற்றிலும் எதிர்பார்க்காத பாகிஸ்தானுக்கு இந்த முறையும் இந்தியாவிடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழி கிடையாது.