ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயனின்று வீணாகக் கடலில் கலப்பது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை முறையாகச் சேமிக்கவும், ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்க்கும் கால கட்டங்களில் உபரிநீரைத் திறந்து விடுவதையும், தமிழகத்திற்குத் தேவைப்படும் நேரங்களில் உரிய நீரை வழங்க மறுப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பாயும் காவிரியை வெள்ள வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவ்வாறு திறக்கப்படும் நீரும் வீணாகக் கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத திமுக அரசால் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறையில் 516 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணை மற்றும் தஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணைக்கான கட்டுமானப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் இடம்பெறுகிறதே தவிர அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துளியளவும் தொடங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்குப் பயனின்றி வீணாகக் கடலில் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும் விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்
ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காத காரணத்தினால் பாசன நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை முறையாகச் சேமித்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவதோடு, புதிய தடுப்பணைகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.