ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேசத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக, பாதுகாப்புத் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டு உற்பத்தி என்ற பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.
2023-24 நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1.27 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். மேலும், 65 சதவீத ஆயுத தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியாகும்.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதித் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா இராணுவத்தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. 2023-24 நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 21,083 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த பத்தாண்டுகளில் 30 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நான்கு ஆண்டுகளில், பாதுகாப்பு ஏற்றுமதி 50,000 கோடி என்ற இலக்கை அடையும் என்று கூறப்படுகிறது.
iDEX (Innovations for Defence Excellence) ஐடெக்ஸ் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (Technology Development Fund) (TDF) மூலம் இராணுவத்துக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 619 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், DRDO உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை விரிவாக்கத்துக்காக உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் மேம்பட்ட பீரங்கி துப்பாக்கி அமைப்பு என இந்தியா தனது ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது.
SCALP குரூஸ் ஏவுகணைகள் , HAMMER வெடிகுண்டுகள் மற்றும் பறக்கும் வெடிமருந்துகள் போன்ற உயர் துல்லிய ஆயுதங்களும் இந்திய விமானப்படையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. இவை குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரில் துல்லியமான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அதிநவீன I-STAR உளவு விமானங்களை போயிங் மற்றும் பாம்பார்டியர் போன்ற நிறுவனங்களிடமிருந்து வாங்க இந்திய விமானப் படை முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதலை இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வான்வழி மற்றும் தரைவழியிலும் இந்த உளவு விமானங்கள், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் இலக்குகளைக் கண்டறிதல் போன்ற பணிகளைத் துல்லியமாகச் செய்யும் திறன் கொண்டவை. உளவு விமானங்களை வாங்கிய பின்னர், DRDO-வின்ஏர்போர்ன் சிஸ்டம்ஸ் மையத்தால் (CABS) உருவாக்கப்பட்ட உள்நாட்டு சென்சார் மற்றும் மின்னணு அமைப்புகளுடன் பொருத்தப்படும்.இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளன.
DRDO வான்வழி அமைப்புகள், கடினமான நிலப்பரப்புகளில் கூட, எதிரிகளின் இலக்குகளை 24 மணி நேரமும் கண்டறிந்து கண்காணிக்க விமானத்துக்கு உதவும். இது, துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு நிகழ் நேர, உயர் நம்பகத்தன்மை கொண்ட நுண்ணறிவை வழங்கும்.
இதுவரை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய அதிநவீன உளவு விமானங்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணையவுள்ளது.
எதிரியின் தாக்குதல்களை வெற்றிகரமாகத் தடுப்பதோடு,விரைவான பதிலடி கொடுக்கவும், எல்லைகளுக்கு அப்பால் தேசியப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் இந்த அதிநவீன I-STAR உளவு விமானங்கள் இனி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.