சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு மாட வீதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கரூரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது காரை பூஜை செய்வதற்காக கோயில் முன்பாக எடுத்து வந்துள்ளார். பூஜை முடிவடைந்த நிலையில் கார் பின்னோக்கி இயக்கப்பட்ட போது தரையில் படுத்து உறங்கிய நபரின் தலையில் ஏறி இறங்கியது.
இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்நிலையத்தில் சரணடைந்த சரவணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.