இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவக் குணமிக்க கார்டிசெப்ஸ் காளான் வகைகளைக் கோவையில் தயாரித்து இரண்டு பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க காளான் வகைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.
காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர வகையாகும். உலக அளவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வகையிலான காளான் வகைகள் காணப்படும் நிலையில் அதில் 2 ஆயிரம் வகை காளான்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், மனித உடலுக்கு முழுமையான சத்துக்களையும் வழங்குவதோடு மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட மருத்துவக் குணம் நிறைந்த காளான்களில் ஒன்று தான் இந்த கார்டிசெப்ஸ் வகை காளான்.
இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சிகளில் மட்டுமே ஒட்டுண்ணியாக வளரும் இந்த கார்டிசெப்ஸ் காளான்களின் மருத்துவப் பயன்பாடு, அவற்றைச் சர்வதேச அளவில் பெரிய அளவில் பிரபலப்படுத்தியுள்ளது. அத்தகைய சிறப்புமிக்க காளான் வகைகளை தற்போது கோவையிலும் கிடைக்கும் வகையில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் இணைந்து இந்த கார்டிசெப்ஸ் காளான் உற்பத்தி மையத்தினை அமைத்துள்ளனர்.
மத்திய அரசின் மூலம் கிடைத்த நிதியுதவியைப் பயன்படுத்தி இம்மலைப்பகுதியில் கிடைக்கும் காளான்களின் மூலக்கூறுகளைச் செயற்கையாகத் தயாரித்து கார்டிசெப்ஸ் காளான் வகைகளை வளர்க்கும் முறை வர்த்தக ரீதியிலும் வெற்றி அடைந்துள்ளது. பிரத்யேக குளிர் அறையை ஏற்படுத்தி அதில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இவ்வகை காளான்கள் பவுடர் வடிவில் மாற்றப்பட்டு தேநீர் மற்றும் சூப்பில் கலந்து அருந்துவதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்படுகின்றன. சோர்வு மற்றும் பலவீனத்தைப் போக்கி உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் இந்த காளான் உற்பத்தி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாப்பதற்கும் சிறந்த அருமருந்தாகத் திகழும் கார்டிசெப்ஸ் வகை காளான்கள், காசநோய், நரம்புக் கோளாறு, நீரழிவு நோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த காளான் வளர்ப்பு முயற்சி கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கும் எதிர்காலத்தில் சிறந்த தொழிலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது..