சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும் குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சேலம் உத்தம சோழபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கட்டடம் தனியாகவும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடமும் உள்ளன. அதாவது 5ஆம் வகுப்பு வரை உள்ள கட்டடம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தம சோழபுரம் பஞ்சாயத்திலும், 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் வகுப்பறை கட்டடம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்திலும் செயல்படுகின்றன.
இரண்டுக்கும் 300 மீட்டர் இடைவெளியே உள்ளன. இந்த இரண்டு கட்டடங்களுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை இன்னும் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதுதான் மாணவ மாணவிகளை அவதிப்பட வைத்துள்ளது.
புதிய சாலை அமைக்கப்படும் எனக் கூறி தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலையில் குப்பைகளின் தேக்கமும், கழிவு நீரும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன மேலும் பள்ளியில் 135 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை போதிய கதவுகள் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.
குப்பைகள் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியிலும், அருகே உள்ள கரபுரநாதர் கோயில் மதில் சுவர் மீதும் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் மாணவ மாணவியர்களை மட்டும் மறந்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக கல்வித்துறைக்கும் உத்தரவிட்டு சாலை , புதிய சுகாதார வசதிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.