சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் அழைப்பை ஏற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி சைப்ரஸ் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
குறிப்பாகத் தலைநகர் நிகோசியாவில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பின்னர், சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கனடா புறப்படுகிறார். வரும் 17-ஆம் தேதி வரை அங்கு இருக்கும் பிரதமர் மோடி, ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்தி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதன்பின், கனடா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வரும் 18-ஆம் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரேஷியா செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.