லக்னோவில் ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது சக்கரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 10.45 மணிக்குப் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 250 ஹஜ் பயணிகள் இருந்தனர்.
இந்த விமானம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அதன் இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமான உடனடியாக விமானத்தை நிறுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
பின்னர் விமானம் ஓடுபாதையிலிருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விமான நிலைய அவசரக்கால மீட்புக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தனர்.
ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டுத் தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.